அமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைகழகம் அருகே மர்ம நபர் ஒருவர் மக்கள் கூட்டத்தை நோக்கி திடீரென சரமாரியாகச் சுட்டதில்; 2 பேர் பலியாகினர். மூவர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அலபாமா மாகாணத்தின் தலைநகரான மாட்கோமரி நகரில் அலபாமா மாநில பல்கலைக்கழகம் உள்ளது.
நேற்று அப்பல்கலைக்கழகத்திற்கு அருகில் வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக்கொண்டு அப்பகுதியில் இருந்த மக்கள் மீது சரமாரியாக சுட்டார். இதை சற்றும் எதிர்பாராத மக்கள் அலறியடித்துக்கொண்டு ஒடினர். இந்த தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் குறித்து மிகக் கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
துப்பாக்கி அனுமதி வழங்கும் விடயத்தில் மத்திய, மாகாண அரசுகள் மிக மோசமான நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக பல்பேவறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.